கோவில்பட்டியில் விவசாயிகள் கைகளில் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் விவசாயிகள் கைகளில் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:37 PM GMT (Updated: 18 Feb 2019 10:37 PM GMT)

படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் விவசாயிகள் கைகளில் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்களை அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்கி சேதப்படுத்தின. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஒரு எக்டருக்கு ரூ.7,410 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை இன்னும் வரவு வைக்கப்படவில்லை.

எனவே விவசாயிகளுக்கு உடனே நிவாரணத்தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கத்தினர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரமேசுவரன், முருகன், கருப்பசாமி, தங்க திருப்பதி, ஜெயராமன், ரவிச்சந்திரன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற வேண்டி, தங்களது கைகளில் வாழை மட்டையை வைத்து, அதன் மீது கற்பூரம் ஏற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களுக்கு உடனே நிவாரணத்தொகை வழங்க வேண்டும். இல்லையெனில் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story