நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 3:12 PM GMT)

நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில்,

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நாடு முழுவதும் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் குமரி மாவட்டத்திலும் நேற்று 2–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை சேவையை வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தையொட்டி, குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்களும், தொலைபேசி நிலையங்களும் பூட்டப்பட்டு இருந்தன. சில இடங்களில் குறைவான பணியாளர்களை கொண்டு இயங்கியது.


2–வது நாள் போராட்டத்தையொட்டி நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் லெட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார். அமைப்பாளர் ராஜூ, அதிகாரிகள் சங்க அகில இந்திய பொருளாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ், அதிகாரிகள் சங்க நிர்வாகி ரோஸ் சிரில் சேவியர், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் நிர்வாகிகள் ராஜேந்திரன், பிரிட்டோஜாய், மோசஸ், அஜய் உள்ளிட்ட ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள தொலைபேசி அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ராஜூ கூறியதாவது:–

எங்களது போராட்டத்தில் பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 2–வது நாளான நேற்று கூடுதலாக ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் பெரும்பாலான தொலைபேசி நிலையங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. குலசேகரத்தில் உள்ள தொலைபேசி நிலையம் மட்டும் செயல்படுகிறது. இதேபோல் வாடிக்கையாளர் சேவை மையங்களும் பெரும்பாலும் செயல்படவில்லை. செயல்படும் சேவை மையங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது போன்களுக்கான பில் தொகையை செலுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். மேலும் சிம் கார்டு விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. சிம்கார்டு குறைபாடுகளை களையவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story