பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி


பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 6:11 PM GMT)

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நெல்லை,

திருவேங்கடத்தில் தாலுகா அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தொடங்கிய ஊர்வலத்திற்கு தாசில்தார் லட்சுமி தலைமை தாங்கினார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பின்னர் ராணுவ வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி, மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள், தாலுகா அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவேங்கடத்தில் பா.ஜ.க. சார்பில் மவுன ஊர்வலம், இரங்கல் கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சரதராஜ், ஒன்றிய பொது செயலாளர் புலிக்குட்டி, நகர துணை தலைவர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் விடுதியில் துணை ராணுவ வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு விடுதி மாணவர்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

சேரன்மாதேவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லுரியின் மாணவ-மாணவிகள், ராணுவ வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி, மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் கல்லூரி முதல்வர் மோனி, பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையம் அருகே உள்ள மேட்டூர் டி.டி.ஏ. தொடக்கப்பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை விஜிலா ஜூலியட் ரூபா, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திசையன்விளை மனோ கல்லூரி மாணவர்கள் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. அரிமா சங்க முன்னாள் தலைவர் சுயம்புராஜன் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ், அனைத்து வியாபாரிகள் பேரமைப்பு தலைவர் சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அங்குள்ள கோர்ட்டு வளாகத்தில் இருந்து மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தவசிராஜன், செயலாளர் சுரேஷ்குமார், உரிமையியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஞானசேகர், செயலாளர் சுதாகர், முத்துகேசவன், சுபாஷ்தங்கத்துரை, மாரியப்பன், காந்திமதிநாதன், கந்தசாமி, கல்பனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பல்வேறு அமைப்புகள், பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் ராணுவ வீரர்களின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story