கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்


கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 6:42 PM GMT)

கும்பகோணத்தில் கழுத்தில் பலகை மாட்டியதால் நாய் ஒன்று சாப்பிட முடியாமல் தள்ளாடி வருகிறது. வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த இந்த பரிதாபம், அப்பகுதி மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சக்கரபாணி கோவில் அருகே பி.சண் முகம் தெரு, பெரிய கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதில் ஒரு நாய் கடந்த சில நாட்களாக அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. காரணம், அந்த நாயின் கழுத்தில் மரப்பலகை ஒன்று மாட்டி உள்ளது.

இதன் காரணமாக அந்த நாயால் இயல்பாக நடமாட முடியவில்லை. கழுத்தில் மரப்பலகை மாட்டி இருப்பதால், அந்த நாயால் சாப்பிட கூட முடியாதது அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது. தலையை சாய்த்து தூங்க முடியாததும் அந்த நாயை அவதி அடைய செய்துள்ளது. சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் அவதிப்படும் அந்த வாய் இல்லா ஜீவன் தள்ளாடியபடி அங்கும், இங்கும் சுற்றி வருவதை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது.

நாயின் பரிதாப நிலையை பார்த்த பலர் நாயின் கழுத்தில் மாட்டிய மரப்பலகையை கழற்ற முயன்றனர். ஆனால் அந்த நாய் கடிப்பதற்கு பாய்ந்ததால் முயற்சி கைவிடப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியில் மளிகை கடை நடத்திவரும் சீனுஎன்பவர் கூறியதாவது:-

கழுத்தில் மரப்பலகையுடன் சுற்றித்திரியும் நாயின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பலகையை அகற்றுவதற்காக பலமுறை முயற்சி செய்தோம். ஆனால் கடிக்க வருவதுபோல அச்சுறுத்துகிறது. இந்த நாய்க்கு உதவ ‘புளூ கிராஸ்’ அமைப்பினர் முன்வர வேண்டும்.

இவ்வாறுஅவர் கூறினார்.

Next Story