மாமல்லபுரத்தில் மாசிமக விழா கடற்கரையில் 50 ஜோடிகள் திருமணம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


மாமல்லபுரத்தில் மாசிமக விழா கடற்கரையில் 50 ஜோடிகள் திருமணம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 8:56 PM GMT (Updated: 19 Feb 2019 8:56 PM GMT)

மாமல்லபுரத்தில் மாசிமக விழாவையொட்டி கடற்கரையில் இருளர் இனத்தை சேர்ந்த 50 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் கடற்கரையில் ஆண்டுதோறும் மாசிமக விழா கொண்டாடப்படுவது வழக்கம். பழங்குடி இருளர் இன மக்கள் மாசிமகத்தை முன்னிட்டு வருடந்தோறும் மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு தென்பகுதியில் உள்ள கடற்கரையில் திரள்வது வழக்கம். அங்கு தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வணங்கி உறவு முறைக்குள் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற சடங்குகளை செய்வது வழக்கம்.

மாசிமகத்தன்று குலதெய்வமான கன்னியம்மன் கடற்கரையில் அருள்பாலிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இருளர் இன மக்கள் நேற்று முன்தினமே மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்து விட்டனர்.

பின்னர் தாங்கள் கொண்டு வந்த தென்னங்கீற்று மற்றும் துணிகளால் குடில்கள் அமைத்து தங்கினர். அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்ட அவர்கள், இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்தனர்.

50 ஜோடிகள் திருமணம்

பின்னர் நேற்று காலை கடற்கரையில் கன்னியம்மனுக்கு மணலில் 7 படி அமைத்து தேங்காய், பூ, பழம் வைத்து வழிபாடு செய்தனர். கழுத்தில் நூல் மாலை அணிந்து ஒருவித சத்தம் எழுப்பியவாறு சாமி ஆடி குறி கேட்டனர். மேலும் காது குத்துதல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

கடந்த ஆண்டு இதே மாசிமகத்தன்று நிச்சயம் செய்த ஜோடிகளுக்கு எளிமையாக திருமணம் செய்யப்பட்டது. அப்போது மணமகன் வேட்டி-சட்டை அணிந்தும், மணமகள் கூரை புடவை கட்டியும் வந்திருந்தனர். தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடியும் மணமக்களை மகிழ்வித்தனர். எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், சிறிய சிறிய குடில்களில் தங்கி, கடற்கரையில் நடந்த இருளர்களின் திருமணம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்கவும், ரசிக்கவும் வைத்தது.

இந்த ஆண்டு மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இருளர் இன ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் பாரம்பரியங்களை விட்டுக்கொடுக்காமல் ஆண்டுதோறும் மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று திரண்டு எளிமையாக வழிபாடு நடத்தியும், திருமணம் செய்தும் தங்கள் பாரம்பரிய கலாசாரத்தை நிலை நிறுத்தினர்.

மாமல்லபுரம் தெற்கு பக்க கடற்கரையில் பழங்குடி இருளர்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களாக திரண்டிருந்தனர்.

Next Story