மனைவி இறந்த துக்கத்தில் கணவர் சாவு அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் சோகம்


மனைவி இறந்த துக்கத்தில் கணவர் சாவு அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் சோகம்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:36 PM GMT (Updated: 19 Feb 2019 10:36 PM GMT)

திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் அடுத்தடுத்து கணவன் மற்றும் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது காரையூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதியான் மகன் காந்தி (வயது 40). இவருக்கும் பக்கத்து ஊரான மாங்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் லட்சுமி (36) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு குழந்தையில்லாத நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாம். இதில் லட்சுமி 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் லட்சுமி இறந்த நாளில் இருந்து கணவர் காந்தி மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டு வந்தாராம். மேலும் யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இறந்து கிடந்தார். காலையில் வெகுநேரம் ஆகியும் வீடு பூட்டியிருந்ததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது காந்தி பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காந்தியின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி அடுத்தடுத்து இறந்ததால் அக்கிராமமே சோகமாக உள்ளது. இறந்து போன காந்தி திருக்களாப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர்.


Related Tags :
Next Story