இந்தோ– திபெத் எல்லை பாதுகாப்பு படைக்கு பயிற்சி பெற்ற 4 பெண்கள் உள்பட 144 வீரர்களை வழியனுப்பும் விழா கூடுதல் இயக்குனர் தலைமையில் நடைபெற்றது


இந்தோ– திபெத் எல்லை பாதுகாப்பு படைக்கு பயிற்சி பெற்ற 4 பெண்கள் உள்பட 144 வீரர்களை வழியனுப்பும் விழா கூடுதல் இயக்குனர் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 10:36 PM GMT)

இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு படைக்கு பயிற்சி பெற்ற 4 பெண்கள் உள்பட 144 வீரர்களை வழியனுப்பும் விழா கூடுதல் இயக்குனர் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை,

சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் உள்ள இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையம் 2011–ல் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பயிற்சி முடித்த சுமார் 7 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட வீரர்கள் இதுவரை எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது முதன்முறையாக 4 பெண்கள் உள்பட 144 பேர் கடந்த 24 வாரங்கள் இங்கு பயிற்சி பெற்றனர். இதையொட்டி இவர்களை படைக்கு அனுப்புவதற்கான வழியனுப்பும் விழா இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையத்தின் கூடுதல் இயக்குனர் ராகேஷ்குமார்மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. பயிற்சி மைய ஐ.ஜி. ஆஜ்டீன்ஈபன் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து பயிற்சி பெற்ற வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை கூடுதல் இயக்குனர் மற்றும் ஐ.ஜி. ஆகியோர் பார்வையிட்டு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

விழாவில் இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குனர் பேசியதாவது:– இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு படை 1962–ல் சீனப் போருக்குப் பின் இந்தியா, சீனா எல்லையில் பாதுகாவலுக்காக தொடங்கப்பட்டது. முதலில் 4 பட்டாளியன்களுடன் தொடங்கப்பட்டது.

தற்போது இதில் 60 பட்டாளியன்களுடன் 90 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 9 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரத்து 700 அடி வரையிலும் 40 டிகிரி சீதோசண நிலையிலும் தங்களது பணியினை செய்து வருகின்றனர். எல்லை பாதுகாப்பு தவிர மற்ற பணிகளையும் செய்து வருகிறது. நக்சலைட்டுகளுக்கு எதிராகவும், ஜனாதிபதி மாளிகை மற்றும் தூதரகங்கள் போன்ற இடங்களிலும் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பயிர்ச்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அமன்ராவத், நீரஜ்உபாதியா, லக்பாடிக்கிசெரி, மிலன்சிங், கிருஷ்ண்டுசர்கார் ஆகிய 5 பேர்களுக்கு கேடயங்களையும், பட்டயங்களையும் கூடுதல் இயக்குனர் வழங்கினார். முடிவில் சிவகங்கை இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மைய கமாண்டர் ஜஸ்டின் ராபர்ட் நன்றி கூறினார்.


Next Story