‘அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்து வருகிறது’ அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


‘அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்து வருகிறது’ அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2019 11:30 PM GMT (Updated: 19 Feb 2019 11:30 PM GMT)

அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்து வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழரசன், துணை செயலாளர் ஜபார், எம்.ஜி.ஆர். மன்ற இணை தலைவர் பெரியசாமி, மேலூர் ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, மேலூர் நகர செயலாளர் பாஸ்கரன், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோர் வழியில் வந்த அ.தி.மு.க. இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வழிநடத்துகின்றனர். இயக்கத்தை அசைத்து விடலாம், குந்தகம் விளைவிக்கலாம் என்று சிலர் நினைத்து வருகின்றனர். தற்போது வலுவான கூட்டணி அ.தி.மு.க. அமைத்து வருகின்றது. தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும் என்பது போல அ.தி.மு.க. அரசு கேட்காமல் மக்களுக்கு கொடுத்து வருகிறது. ஸ்டாலின் என்றைக்கும் தி.மு.க.விற்கு மட்டுமே தளபதியாக இருப்பார். தமிழ்நாட்டிற்கு அல்ல என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

அ.தி.மு.க.வுடன் அகில இந்திய கட்சியான பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பா.ம.க.வும் கூட்டணிக்கு வந்துள்ளனர். கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். ஆனால் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் சொல்லவில்லை? அவர் இரட்டை வேடம் போடுகிறார். பணத்திற்காக ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் விலைபோய்விட்டார் என ஸ்டாலின் பேசுகிறார். தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் கொள்கையா? அ.தி.மு.க.வுடன் என்றால் பணமா? மக்கள் சக்தி அ.தி.மு.க.விடமே உள்ளது என்று பா.ம.க. முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததற்கு காரணம் என்று அ.தி.மு.க. அரசை ஸ்டாலின் நடத்தும் ஊராட்சி சபை கூட்டத்தில் குற்றம்சாட்டுகிறார். உள்ளாட்சி தேர்தல் நிறுத்திவைப்புக்கு நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கே காரணம். ஆனால் அ.தி.மு.க. அரசை அவர் குறை கூறுகிறார். ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story