நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் விற்பனைக்கு வந்த மோடி, ராகுல் உருவம் பொறித்த சேலைகள்


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் விற்பனைக்கு வந்த மோடி, ராகுல் உருவம் பொறித்த சேலைகள்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:31 PM GMT (Updated: 19 Feb 2019 11:31 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மும்பையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உருவம் பொறித்த சேலைகள் விற்பனைக்கு வந்து உள்ளன.

மும்பை,

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கிறது. எனவே நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இதேபோல தேர்தலை சார்ந்த கட்சி கொடிகள் தயாரித்தல் போன்ற பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் மும்பையில் அரசியல் கட்சியினர் உருவம் பொறித்த ஆடைகள் விற்பனைக்கு வர தொடங்கி உள்ளன. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற தலைவர்களின் உருவம் பொறித்த சேலைகள் தாதர் மார்க்கெட்டில் உள்ள ஜவுளிக்கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

இதை அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சியினரும் இந்த சேலைகளை மொத்தமாக வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக கட்சி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு வழங்க இந்த சேலைகள் வாங்கி செல்லப்படுகிறது.

அரசியல் தலைவர்கள் படம் பொறித்த சேலைகள் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. சேலையின் தரம் மற்றும் அதில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தாதரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் ஒருவர் கூறியதாவது:-
கடந்த 2013-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி உருவம் பொறித்த சேலைகளை விற்பனை செய்து வருகிறோம். இந்த சேலைகளை நாங்களே தயாரிக்கிறோம். ஒரு சேலை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. பெண்கள் ஆர்வமாக இந்த சேலைகளை வாங்கி செல்கின்றனர்.

சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் இருந்து 300 சேலைகளுக்கு ஆர்டர் வந்துள்ளது. சென்னையில் நடைபெற உள்ள ஒரு பொது கூட்டத்திற்காக அந்த சேலைகளை வாங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story