துறையூர் அருகே மதுபானம் தயாரித்த வாலிபர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு


துறையூர் அருகே மதுபானம் தயாரித்த வாலிபர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 7:36 PM GMT)

மதுபானம் தயாரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

துறையூர்,

துறையூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் பெரமங்கலம் தனியார் பால் நிறுவனம் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலை புதுத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சரத்குமார் (வயது 26) என்றும், மோட்டார் சைக்கிளில் மதுபாட்டிலை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த பாட்டில்களில் மதுபானம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சி மேல கொண்டயம்பேட்டையை சேர்ந்த கார்த்தி, அஜய் ஆகியோருடன் சேர்ந்து பெரமங்கலம்-உடையாம்பட்டி செல்லும் சாலையில் பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான வயலின் ஒரு பகுதியில் கோழிபண்ணைக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து மதுபானம் தயாரித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து துறையூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையிலான மது விலக்கு போலீசார் சரத்குமாரை கைது செய்தனர். மேலும் அந்த கட்டிடத்தில் இருந்த 800 காலிமது பாட்டில்களையும், மதுநிரப்பப்பட்ட 500 பாட்டில்களையும், கேன்களையும் பறிமுதல் செய்தனர். மது தயாரிப்பதற்கான பொருட்களையும் கைப்பற்றினர்.

மேலும் இந்த மது தயாரிப்புக்கு உடந்தையாக இருந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வீரன் என்ற பாலகிருஷ்ணன், ரவி மற்றும் கார்த்தி, அஜய் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Next Story