எருது விடும் விழாவில் மோதல்: அரசு வாகனங்களை சேதப்படுத்திய 24 பேர் கைது மேலும் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


எருது விடும் விழாவில் மோதல்: அரசு வாகனங்களை சேதப்படுத்திய 24 பேர் கைது மேலும் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Feb 2019 10:00 PM GMT (Updated: 21 Feb 2019 5:26 PM GMT)

தளி அருகே எருது விடும் விழாவில் ஏற்பட்ட மோதலில் அரசு வாகனங்களை சேதப்படுத்தியதாக 24 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மதகொண்டப்பள்ளி வெங்கடேஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழாவை தொடர்ந்து நேற்று முன்தினம் எருது விடும் விழா நடத்தப்பட்டது. மாவட்டம் நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி இந்த விழா நடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் அங்கு சென்று எருது விடும் விழாவை தடுக்க முயன்றனர். அப்போது அங்கு கூடியிருந்த சிலர் போலீசார் சென்ற ஜீப் மீது கற்களை வீசி தாக்கினார்கள். மேலும் அருகில் உள்ள தீயணைப்பு வாகனத்தையும் அடித்து நொறுக்கினார்கள். இதில் போலீஸ் வாகனமும், தீயணைப்பு வாகனமும் சேதம் அடைந்தது. மேலும் தீயணைப்பு வீரர்கள் பேட்டையா, சந்திரசேகர் ஆகியோர் காயம் அடைந்தனர். போலீசார் சிலரும் லேசான காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக மதகொண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் தளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து மெக்காலகவுண்டனூர் கோபால் (வயது 24), பி.சிகரலப்பள்ளி திம்மராயப்பா (27), மாருப்பள்ளி ராமச்சந்திரன் (28), ஆனேக்கல் கார்த்திக் (23), கங்காதர் (30), ராஜூ (34), கோட்டபள்ளம் பசுவராஜ் (22), தேவர்பெட்டா கிருஷ்ணப்பா (23), கொட்டூர் மாதேஷ் (26) உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான 24 பேரையும் போலீசார் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி மேகலா மைதிலி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில், கைதான 24 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக மதகொண்டப்பள்ளி மனோகர், குப்பட்டி ரவி, எஸ்.குருபட்டி பாண்டு, பேளகொண்டப்பள்ளி சிவசங்கர், உப்பாரப்பள்ளி பிரசாத் ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கைதான 24 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் நேற்று 2-வது நாளாக மதகொண்டப்பள்ளி பகுதியில் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

Next Story