கச்சிராயப்பாளையம் பகுதியில் பெண்களை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த மேலும் 7 பேர் கைது


கச்சிராயப்பாளையம் பகுதியில் பெண்களை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த மேலும் 7 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2019 11:00 PM GMT (Updated: 21 Feb 2019 5:43 PM GMT)

கச்சிராயப்பாளையம் பகுதியில் பெண்களை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயப்பாளையம்,

சின்னசேலம் அருகே உள்ள வாணியந்தலை சேர்ந்தவர் வேலு மகன் சத்தியராஜ் (வயது 30), டிரைவர். இவர் கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்தூர் கிராம எல்லையில் பங்களாவுடன் கூடிய விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அங்கு தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் சத்தியராஜ் வேலைக்கு சென்றதும், வீட்டில் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியான சுகுணா(26), தாய் கண்ணகி(40), தங்கை தனலட்சுமி(25) ஆகியோர் இருந்தனர்.

அப்போது நள்ளிரவில் சத்தியராஜ் வீட்டுக்கு சென்ற 10 பேர் கொண்ட கும்பல், கண்ணகி, தனலட்சுமி, சுகுணா ஆகியோரை தாக்கி, கயிற்றால் கட்டிப்போட்டு, 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம், பென்டிரைவ், மெமரிகார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும் கடந்த மாதம் 27-ந் தேதி கச்சிராயப்பாளையம் அடுத்த சிவகங்கை கிராமத்தை சேர்ந்த செம்மலை(45) என்பவரது வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த செம்மலையின் மனைவி செல்வி(40), மகள் செவந்தி(17), தாய் அங்கம்மாள் ஆகியோரை கயிற்றால் கட்டிப்போட்டு, 1¼ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மேற்பார்வையில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சங்கராபுரம் அருகே உள்ள பொருவளூரை சேர்ந்த குப்பன் மகன் கிரி (வயது 32), மரக்காணம் அருகே பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மோகன்(34), அரியந்தாங்கலை சேர்ந்த அமாவாசை மகன் பாலாஜி(29) ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 7 பேரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கச்சிராயப்பாளையம் பழைய பஸ் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை மறித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூ.நத்தம் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் மாரி(25), மாதம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ராஜபாண்டியன்(26), எலவனாசூர்கோட்டை அருகே உள்ள கீழ்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்(20), திருவண்ணாமலை மாவட்டம் ஆகாரம் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியகுமார் மகன் பாஸ்கர்(26) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் நல்லாத்தூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் பெண்களை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் இச்சம்பவத்தில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் சந்திரமுரளி(26), பெங்களூருவை சேர்ந்த முனுசாமி மகன் மணிகண்டன்(27), உளுந்தூர்பேட்டை கொத்தானூர் கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் ராஜேஷ்(19) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் பகுதியில் பதுங்கியிருந்த சந்திர முரளி, மணிகண்டன், ராஜேஷ் ஆகியோரை போலீசார் பிடித்து வந்தனர். இவர்களிடமிருந்து மடிக்கணினி, 4 பவுன் நகை, கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து மாரி உள்பட 7 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story