நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2019 11:00 PM GMT (Updated: 21 Feb 2019 7:03 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.

நாகப்பட்டினம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் 2-ம் ஆண்டின் சாதனைகளை விளக்கியும், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது குறித்தும், ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் நாகை மண்டலம் சார்பில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் முன்னிலை வகித்தார்.

இதில் எம்.பி.க்கள் கோபால், பாரதிமோகன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம், எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. இதனால் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. அமைத்துள்ளது பூஜ்ஜிய கூட்டணி.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நகர செயலாளர் தங்க.கதிரவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆசைமணி, விஜயபாலன், சக்தி, கோடிமாரி உள்பட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வேதமூர்த்தி நன்றி கூறினார். 

Next Story