கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி


கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 21 Feb 2019 11:30 PM GMT (Updated: 21 Feb 2019 9:26 PM GMT)

கோவையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை,

தஞ்சாவூரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 22). இவர், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கொடிசியா கண்காட்சி வளாகம் அருகே உள்ள தனது நண்பர் அறைக்கு சென்றார். அதன்பின்னர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு இடதுபுறம் திரும்பி கொடிசியா சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் பாலாஜி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்று விட்டது.

உடனே அங்கிருந்தவர்கள் பாலாஜியை காப்பாற்றி அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாலிபர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து கோவை கிழக்குப்பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்குள்ள தனியார் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் விபத்து ஏற்படுத்திய காரின் பதிவு எண் தெரிந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது குறிச்சி ஹவுசிங்யூனிட் பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவரது மகள் தர்சனா ரூத் (21) என்பதும், அவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரிந்தது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி மாணவி தர்சனா ரூத் மீது அதிவேகமாக காரை ஓட்டுதல், விபத்தில் காயம் ஏற்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் சிக்கி காயம் அடைந்த வாலிபர் பாலாஜி ஹெல்மெட் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பினார். அதிவேகமாக மாணவி ஓட்டி வந்த கார் பாலாஜி மீது மோதி தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story