ரூ.26 கோடி மதிப்பில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணி: காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்


ரூ.26 கோடி மதிப்பில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணி: காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:30 PM GMT (Updated: 23 Feb 2019 11:30 PM GMT)

ரூ.26 கோடி மதிப்பில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளை காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மதுரை விமான நிலையத்தில் சுமார் ரூ.26 கோடி மதிப்பில் விமானங்கள் நிறுத்துமிட விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விரிவாக்க பணிகள் மூலம் கூடுதலாக 5 விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்களை விமான நிலையத்தில் நிறுத்த முடியும். மேலும், கூடுதலாக 1 தானியங்கி படிக்கட்டுகளும் அமைக்கப்பட இருக்கிறது.

மத்திய விமானத்துறை மந்திரி சுரேஷ்பிரபு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி விரிவாக்க பணிகளை தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் நடந்த விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ், கலெக்டர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விரிவாக்க பணிகள் மூலம், கூடுதல் விமானங்கள் ஒரே நேரத்தில் வந்திறங்க முடியும். மேலும் காலை 6 மணியில் இருந்தும் விமானங்களை சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்க முடியும். இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதுபோல், இரவு 12 மணி வரை விமானங்களை இயக்க முடியும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story