வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதி அளிக்க பயனாளிகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்


வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதி அளிக்க பயனாளிகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்
x
தினத்தந்தி 25 Feb 2019 10:45 PM GMT (Updated: 25 Feb 2019 7:49 PM GMT)

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாநில அரசின் ரூ.2,000 நிதி அளிக்கும் வகையில் பயனாளிகள் கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. வீடு, வீடாக சென்று அரசு பணியாளர்கள் விவரம் கேட்டறிந்து அதற்குரிய படிவத்தினை பூர்த்தி செய்து வாங்கி சென்றனர்.

கரூர்,

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் தமிழக அரசின் சார்பில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் இந்த சிறப்பு நிதியுதவி திட்டத்திற்காக ஊரக, நகர்புற, பேரூராட்சி பகுதிகளிலுள்ள வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள விவசாய தொழிலாளர்கள் மற்றும் ஏழை-எளிய மக்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கரூர் மாவட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணிக்காக வீடு தேடி வரும் அரசு பணியாளர்களுக்கு ஆவணங்களை காண்பித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கரூர் நகராட்சியை பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மொத்தம் 3,741 பேர் என கணக்கிடப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. எனினும் அதில் சிலர் இறந்திருக்கவும், இடம் பெயர்ந்து சென்றிருக்கவும் மற்றும் எண்ணிக்கை அதிகரித்து இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் நேற்று காலை முதலே கணக்கெடுப்பு பணிக்காக 65 அரசு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வீடு, வீடாக சென்று, தாங்கள் வைத்திருந்த புள்ளி விவர பட்டியலை பார்த்து கணக்கெடுப்பினை மேற்கொண்டனர். அப்போது அதற்குரிய விண்ணப்ப படிவத்தினை பயனாளிகளின் ஒத்துழைப்புடன் பூர்த்தி செய்து வாங்கி சென்றனர். தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை, தற்சமயம் வருமானவரி செலுத்துபவராக இருந்தால் பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை எண், வங்கிக்கணக்கு எண் போன்ற விவரங்கள் கணக்கெடுப்பு பணியில் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் விண்ணப்ப படிவம் கொடுத்ததற்கான ஒப்புகை சான்று சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது.

கணக்கெடுப்பு பணிக்கு வந்தவர்களிடம், பொதுமக்கள் பலரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோம் எனக்கூறி படிவம் கொடுக்கவும் செய்தனர். வருகிற 28-ந்தேதிக்குள் கணக்கெடுப்பு பணி முடிவடைய உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கும் பொருட்டு பொதுமக்கள் பலர் ஒரே நேரத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் மாதிரி விண்ணப்ப படிவத்தினை பெற்று கொண்டு, தங்களுக்கு எழுந்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு சென்றனர். இதே போல் கரூர் மாவட்டம் முழுவதும் மாநில அரசின் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

Next Story