அரசு பள்ளிகளுக்கு பொதுமக்கள் கல்விச்சீர்


அரசு பள்ளிகளுக்கு பொதுமக்கள் கல்விச்சீர்
x
தினத்தந்தி 2 March 2019 10:30 PM GMT (Updated: 2 March 2019 7:59 PM GMT)

பொதுமக்கள் சார்பில் அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டது.

உடையார்பாளையம்,

உடையார்பாளையம் தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள், முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மேஜை, பீரோ, நாற்காலி, மின்விசிறி, நோட்டுகள் உள்பட பல்வேறு பொருட்களை ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். இதில் பெற்றோர் கழக தலைவர் துருவேந்திரன், பள்ளி கிராம கல்விக்குழு தலைவர் வெங்கட்ராமன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுசிலா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சையத்மகது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆண்டிமடம் விளந்தை (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆரோக்கியமேரி முன்னிலை வகித்தார். கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலி, தேச தலைவர்களின் உருவப்படம் உள்பட பல்வேறு பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து, வட்டார கல்வி அலுவலர் நீலமேகம், வட்டார மேற்பார்வையாளர் சங்கர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா வரவேற்று பேசினார். இதில் பெற்றோர்கள், மாணவ- மாணவிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story