கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி-எலுமிச்சை சாறு சூப்பிரண்டு வழங்கினார்


கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி-எலுமிச்சை சாறு சூப்பிரண்டு வழங்கினார்
x
தினத்தந்தி 2 March 2019 10:45 PM GMT (Updated: 2 March 2019 8:41 PM GMT)

கோடை வெயிலை சமாளிக்க கரூர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசாருக்கு சோலார் தொப்பியும் மற்றும் எலுமிச்சை சாறையும் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் வழங்கினார்.

கரூர்,

கரூரில் பகல் முழுவதும் வெயிலிலேயே நின்று கொண்டு போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்தும் சீரிய பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசாருக்கு, வெப்பத்தின் தாக்கம் உடலில் இறங்காமல் இருக்கும் வகையிலான சோலார் தொப்பி மற்றும் தாகம் தணிக்க எலுமிச்சை சாறு வழங்கும் நிகழ்ச்சி கரூர் மனோகரா கார்னர் ரவுன்டானா அருகே நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் கலந்து கொண்டு, போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு சோலார் தொப்பி ,எலுமிச்சை சாறு மற்றும் மோர் வழங்கி, வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து ஜூன் மாதம் முடியும் வரை போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்தும் பணியில் உள்ள போலீசாருக்கு எலுமிச்சை சாறு, மோர் ஆகியவை காலை 11 மணி மற்றும் மாலை 5 மணிக்கு வழங்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, லட்சுமணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்மொழிஅரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கரூர் மனோகரா கார்னர் ரவுன்டானா, கோவை ரோடு, திருக்காம்புலியூர் ரவுன்டானா, சுக்காலியூர் ரவுன்டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோலார் தொப்பி அணிந்து கொண்டு போக்குவரத்து போலீசார் பணியாற்றினர். 

Next Story