தமிழக அரசின் நலத்திட்டங்களின் மூலம் பயன்பெற்றவர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேட்டி


தமிழக அரசின் நலத்திட்டங்களின் மூலம் பயன்பெற்றவர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 3 March 2019 11:30 PM GMT (Updated: 3 March 2019 7:40 PM GMT)

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் பயன்பெற்றவர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் ரெயில் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் நேற்று ஆவின் பாலகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆவின் பாலகங்களை திறந்துவைத்தார்.

விழாவில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குனர் காமராஜ், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர் லதா, துணைப்பதிவாளர்(பால்வளம்) பார்த்தீபன், திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் மனோகரன், துணைத்தலைவர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

பால் வளத்துறையின் சார்பில் ஈரோடு, கோவை மாவட்டத்தில் இருந்து பிரித்து திருப்பூர் மாவட்டத்துக்கு தனியாக பால் வள ஒன்றியம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் பால் விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது. அதற்கு ஏற்ப பால் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக திருப்பூர் ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் ஆவின் பாலகம் திறக்கப்பட்டுள்ளது.

உடுமலை நகரில் அதிநவீன மையம் அமைத்து ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும். திருப்பூர் மாவட்ட மக்கள் ஆவின் பாலை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும். அலகுமலையில் ரேக்ளா போட்டி அனுமதி பெற்று நடக்கிறதா? என்பது குறித்து கலந்து பேசி முடிவு செய்யப்படும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொடுக்கப்படுகிறது. அந்த திட்டங்களை பெற்று பயன்பெற்ற மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒவ்வொரு துறையிலும் பல்வேறு திட்டங்களை கொடுத்து வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் கிராமப்புற பகுதிகளில் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக 1½ லட்சம் பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பேருக்கு கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. 77 ஆயிரம் பேருக்கு நாட்டு இன கோழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நலத்திட்டங்களை பெற்றவர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story