பணத்தகராறில் மாமியாரை கல்லால் அடித்து கொலை செய்த மருமகன் உள்பட 2 பேர் கைது


பணத்தகராறில் மாமியாரை கல்லால் அடித்து கொலை செய்த மருமகன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 March 2019 10:15 PM GMT (Updated: 3 March 2019 8:07 PM GMT)

பணத்தகராறில் மாமியாரை கல்லால் அடித்து கொலை செய்த வழக்கில் மருமகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூர் செங்கோடகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 56). இவரது மனைவி ஆசீர்வாதம்மாள் (46). இவர்களுடைய மகள் அமலாராணி (29). இவருக்கு திருமணம் ஆகி 8 வயதில் மகள் உள்ளார். அமலாராணியின் கணவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த விபத்தில் இறந்துவிட்டார்.

இதையடுத்து, சூலூரை அடுத்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (35) என்பவரை 2-வதாக அமலாராணி திருமணம் செய்து கொண்டார். ராஜேந்திரன், அமலாராணியின் முதல் கணவரின் உறவினர் ஆவார்.

இந்த நிலையில் அமலாராணியின் நகைகளை அவரது முதல் கணவர் அடமானம் வைத்து இருந்துள்ளார். ஏலத்தில் செல்ல இருந்த அந்த நகைகளை மீட்க 2-வது கணவரின் தாயார் கலாமணி ரூ.1 லட்சத்தை அமலாராணியின் பெற்றோரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின்னர் அந்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. இதற்கிடையே அந்த பணத்தை திரும்பி கொடுக்கும்படி அமலாராணியிடம், ராஜேந்திரன் மற்றும் கலாமணி ஆகியோர் கேட்டுள்ளனர். ஆனால் அவரது பெற்றோர் பணத்தை திரும்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகளை பார்க்க மரியதாஸ், ஆசீர்வாதம்மாள் ஆகியோர் ராஜேந்திரன் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். அப்போது அவர்களிடம் ராஜேந்திரன் பணத்தை கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், அவரது தாயார் கலாமணி ஆகியோர் சேர்ந்து அங்கு கிடந்த கல்லை எடுத்து ஆசீர்வாதம்மாளின் தலையில் தாக்கி உள்ளனர்.

இதை பார்த்த மரியதாஸ் மனைவியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் ராஜேந்திரன் தாக்கி உள்ளார். இதில் கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு ஆசீர்வாதம்மாள், மரியதாஸ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இருவரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஆசீர்வாதம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மரியதாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆசீர்வாதம்மாளை கொலை செய்ததாக ராஜேந்திரன் மற்றும் அவரது தாயார் கலாமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பணத்தகராறில் மாமியாரை அவரது மருமகனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story