சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா 10-ந் தேதி தொடங்குகிறது


சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா 10-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 3 March 2019 10:30 PM GMT (Updated: 3 March 2019 9:22 PM GMT)

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி மஞ்சள் ஆடை உடுத்தி, கடும் விரதம் இருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் சமயபுரத்திற்கு வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

இக்கோவிலில் உள்ள அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உற்சபலன் கிடைக்கும் என்பதும், இக்கோவிலில் வழிபட்டால் ராகு, கேது, திசை, தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய அருள் அம்சம் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

மேலும் தன்னை நாடி வருவோர் மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க, பக்தர்களுக்காக மாரியம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார். ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பச்சை பட்டினி காலமாகும். இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், கரும்பு, பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 7 மணிக்குமேல் 8 மணிக்குள் கோவில் நிர்வாகத்தின் சார்பாக இணை ஆணையர் சி.குமரதுரை தலைமையில், யானைமீது கோவில் அர்ச்சகர் பூக்கூடைகளில் பூக்களை வைத்து சுமந்து வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றுவார். தொடர்ந்து சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள் அம்மனுக்கு சாற்றப்படும். அன்று முதல் அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை, மேலாளர் ஹரிஹரசுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். 

Next Story