கோவில்பட்டி அருகே பயங்கரம் ஆசிரியர் வெட்டிக் கொலை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கோவில்பட்டி அருகே பயங்கரம் ஆசிரியர் வெட்டிக் கொலை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 March 2019 11:39 PM GMT (Updated: 3 March 2019 11:39 PM GMT)

கோவில்பட்டி அருகே தனியார் பள்ளிக்கூட ஆசிரியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆத்திக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் நயினார். இவருடைய மகன் கணேசமூர்த்தி (வயது 32). பட்டதாரியான இவர், சில்லாங்குளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு 9 மணி அளவில் இவர் கோவில்பட்டியை அடுத்துள்ள பாண்டவர்மங்கலம் சந்திப்பு பெரியார் சிலை அருகே வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை வழிமறித்தனர். இதனால் கணேசமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். அவர் சுதாரிப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மநபர்கள், சரமாரியாக கணேசமூர்த்தியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கணேசமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆசிரியர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட கணேசமூர்த்திக்கு கமலாதேவி என்ற மனைவியும், கவின் சேகுரா (6), மதிவதினி (5) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். கோவில்பட்டி அருகே ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story