புயல் நிவாரணம் வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் கிராம மக்கள் அறிவிப்பு


புயல் நிவாரணம் வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் கிராம மக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 March 2019 10:45 PM GMT (Updated: 4 March 2019 7:50 PM GMT)

புயல் நிவாரணம் வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என பேராவூரணியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கிராம மக்கள் அறிவித்தனர்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மரக்காவலசை, கொடிவயல், பாலாவயல் ஆகிய கிராமங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த கிராமங்களில் இருந்த தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் வீடுகளையும் இழந்து தவிக்கிறார்கள்.

இந்த கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புயல் நிவாரணம் வழங்கக்கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், புயலால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை முறையாக கணக்கெடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் கவலையுடன் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் புயல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் நேற்று பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 10 நாட்களுக்குள் புயல் நிவாரணம் வழங்காவிட்டால் ஆதார் அடையாள கார்டு, ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் அறிவித்தனர்.

இதனிடையே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story