இந்த ஆண்டு எத்தனை மதுக்கடைகள் மூடப்படும்? அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி


இந்த ஆண்டு எத்தனை மதுக்கடைகள் மூடப்படும்? அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 4 March 2019 11:11 PM GMT (Updated: 4 March 2019 11:11 PM GMT)

இந்த ஆண்டு எத்தனை மதுக்கடைகள் மூடப்படும் என்று அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை,

தமிழகத்தின் சில இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, ‘‘அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? அடுத்த கட்டமாக எத்தனை கடைகள் மூடப்படும். கடைகள் திறக்கப்படும் நேரம் குறைக்கப்படுமா?’’ என பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஸ்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

அப்போது, அரசு கூடுதல் தலைமை வக்கீல் வாதிடுகையில், ‘‘இதுவரை தமிழகத்தில் ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மது வாங்க வருபவர்களின் வயது குறித்த சந்தேகம் ஏற்பட்டால், உரிய சான்றுகளை சரிபார்க்க அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் குறைந்த நேரமே செயல்படுகிறது. இதனால், மது விற்பனை குறைந்தாலும், விலை அதிகரிப்பால் வருமானம் அதிகரித்துள்ளது’’ என்றார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘‘தமிழகத்தில் குடிநோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கையின்படி, இந்த ஆண்டு எத்தனை மதுக்கடைகள் மூடப்படும்? டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க முடியுமா? தமிழகத்தில் எத்தனை மனமகிழ்மன்றங்கள் செயல்படுகின்றன? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 8–ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story