படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலை இளைஞர் பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தல்


படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலை இளைஞர் பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 March 2019 10:45 PM GMT (Updated: 7 March 2019 5:25 PM GMT)

படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும் என்று இளைஞர் பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்,


அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தஞ்சை மாவட்ட கோரிக்கை மாநாடு தஞ்சையில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. கூட்ட அரங்கில் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பாலசந்திரன் கொடியேற்றினார்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி, துணை செயலாளர் கல்யாணசுந்தரம், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம், வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அன்பழகன், மாணவர் பெருமன்றத்தின் மாநில துணைத்தலைவர் முகில், மாவட்ட செயலாளர் செந்தூர்நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக இளையராஜா, செயலாளராக முகில், துணைத்தலைவர்களாக குருமூர்த்தி, துர்காதேவி, துணை செயலாளர்களாக செந்தமிழ்செல்வன், சிவக்குமார், பொருளாளராக இலங்கேஸ்வரன் மற்றும் மாவட்டக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

தமிழகம் முழுவதும் 99 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு தகுதிக்கேற்ப வேலை வழங்கிட வேண்டும். பகத்சிங் பெயரில் தேசிய இளைஞர்களுக்கான வேலை உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்றி அனைவருக்கும் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


படித்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலையில்லா கால நிவாரண உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் வழங்குவது மட்டுமின்றி மிகக் குறைவான தொகையாக உள்ளது. இந்த தொகையினை கொண்டு வேலைவாய்ப்பிற்காக எந்த நிறுவனத்திற்கும் விண்ணப்பிக்க முடியாது. இந்நிலையைப் போக்கிட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.5,000– ம் மற்றவர்களுக்கு ரூ.3,000– ம் என உயர்த்தி வேலை கிடைக்கும் வரை வழங்க வேண்டும்.

அரசுப் பணிக்கான வயது உச்சவரம்பு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 35 ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 ஆகவும் வயது உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியான பல இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவு தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே அரசுப் பணிக்கான வயது உச்சவரம்பு குறைத்ததை கைவிட்டு இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்குவதில் பழைய முறையை அமல்படுத்த வேண்டும் காவிரி பாசனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story