ரூ.4 கோடியில் சீரமைப்பு பணி: மீண்டும் ஓசை எழுப்ப தயாராகும் தஞ்சை மணிக்கூண்டு


ரூ.4 கோடியில் சீரமைப்பு பணி: மீண்டும் ஓசை எழுப்ப தயாராகும் தஞ்சை மணிக்கூண்டு
x
தினத்தந்தி 7 March 2019 10:45 PM GMT (Updated: 7 March 2019 7:29 PM GMT)

தஞ்சை ராஜப்பா பூங்காவை புதுப்பொலிவாக்கி, அங்கு உள்ள மணிக்கூண்டை ஓசை எழுப்ப தயார் செய்வதற்கான பணிகள் ரூ.4 கோடியில் நடைபெற உள்ளன. இந்த பணிகள் விரைவில் தொடங்குகின்றன.

தஞ்சாவூர்,

உலகின் புராதன நகரங்களில் தஞ்சையும் ஒன்று. இங்கு பழம்பெருமை வாய்ந்த தஞ்சை பெரியகோவில், நாயக்கர்கள் கட்டிய அரண்மனை என்று பல்வேறு ஆட்சியாளர்களால் பல்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்ட புராதன சின்னங்கள் உள்ளன. அந்த வகையில் தஞ்சைக்கு பெருமை சேர்ப்பது ராஜப்பா பூங்காவில் உள்ள மணிக்கூண்டு. இதனை ‘ராணிஸ் டவர்’ என்றும் அழைப்பார்கள்.

மணிக்கூண்டு ராசா மிராசுதார் மருத்துவமனையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிக்கூண்டை 1883-ம் ஆண்டு அமைத்து உள்ளனர். விக்டோரியா மகாராணி முடி சூட்டியதை நினைவுகூரும் வகையில் இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த மணிக்கூண்டை கட்ட தஞ்சை நகராட்சிக்கு மராட்டிய ராணி நிதி கொடுத்ததால் ‘ராணிஸ் டவர்’ என்று அழைக்கப்படுவதாகவும் சிலர் கூறுவர்.

விக்டோரியா மகாராணி முடி சூடி 60 ஆண்டுகள் நினைவு பெற்றதை நினைவு கூரும் வகையில் இந்த டவர் அருகே வைரவிழா நினைவு அலங்கார வளைவு கட்டப்பட்டது. அது தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடந்த போது சாலை விரிவாக்கத்திற்காக வளைவு அகற்றப்பட்டது.

இந்த மணிக்கூண்டு 130 அடி உயரம் கொண்டது. கட்டிடம் முழுவதும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது. செங்கலின் மேல் சிமெண்டு பூச்சு இல்லாமல் மிகுந்த கலை நயத்துடன் காட்சி அளிக்கிறது. 20 அடி உயரம் கொண்ட மணிக்கூண்டின் அடிப்பகுதி சதுரவடிவில் உள்ளது. 4 புறமும் வாயில்கள் உள்ளன. அதன் மேல் மணிக்கூண்டின் பிரதான கட்டிடம் 60 அடிக்கு அறுகோண வடிவிலும், அதன் மேல் 40 அடிக்கு சதுர வடிவிலும், அதற்கு மேல் 10 அடி உயரத்துக்கு பெரியகோவில் கோவில் கோபுரம் போன்றும் இருக்கும். மணிக்கூண்டு கட்டிடத்தில் முதலாம் உலகப்போரில் தஞ்சையில் இருந்து கலந்து கொண்ட 61 பேரில் 4 பேர் வீர மரணம் அடைந்தனர் என்ற செய்தி அடங்கிய பளிங்கு கல்லும் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் 100 படிகளுக்கு மேல் உள்ளது. கட்டிடத்தில் அழகிய மரவேலைப்பாடுகளும், பளிங்கு கற்களுக்கு மத்தியில் ஒரு கெடிகாரமும் இருந்தது. இந்த கெடிகாரம் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டதாகும். இதன் மணியோசை கிட்டத்தட்ட 3 மைல் தூரத்திற்கு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நாளடைவில் இந்த மணிக்கூண்டு செயல்படவில்லை. கெடிகாரமும் அங்கு இல்லை.

தற்போது இந்த மணிக்கூண்டும், ராஜப்பா பூங்காவும் பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளன.

தஞ்சை மாநகரம் ‘ஸ்மார்ட் சிட்டியாக’ அறிவிக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ.454 கோடியே 86 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ரூ.4 கோடி செலவில் ராஜப்பா பூங்கா மற்றும் மணிக்கூண்டு சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதில் பூங்காவை புதுப்பொலிவாக்கி, இருக்கைகள், விளக்குகள் அமைத்து, மணிக்கூண்டை ஓசை எழுப்பும் வகையில் தயார் செய்வதற்கான பணிகள் நடைபெற உள்ளன. பூங்காவில் தஞ்சையில் உள்ள முக்கிய இடங்கள், அவற்றின் தூரங்கள் குறித்த வழிகாட்டி பலகையும் இடம் உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராஜப்பா பூங்கா மற்றும் மணிக்கூண்டு ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. பூங்காவையொட்டி உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, இந்த கடைகளுக்கு பதிலாக அதன் அருகிலேயே மாற்று இடத்தில் கடைகள் கட்டப்பட உள்ளது”என்றார்.

Next Story