காதல் விவகாரத்தில் ரவுடியை வெட்டிக் கொல்ல முயன்ற 4 பேர் கைது


காதல் விவகாரத்தில் ரவுடியை வெட்டிக் கொல்ல முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2019 10:15 PM GMT (Updated: 7 March 2019 8:39 PM GMT)

திருச்சியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் ரவுடியை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜேசுதாஸ்(வயது40). ரவுடி. இவரது மைத்துனர் வெங்கடேசன். இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். அப்பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அப்பெண்ணின் மூத்த மகளை, பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் விஜய்பாபு(22) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த வெங்கடேசன், விஜய்பாபுவை சந்தித்து தட்டிக்கேட்டதுடன், அவரை தாக்கியும் உள்ளார். இது விஜய்பாபுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் தனது நண்பர்களான காஜாபேட்டையை சேர்ந்த விமல்(21), குமார்(25) மற்றும் கீழப்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சப்பாணி மகன் அன்பழகன்(19) ஆகியோருடன் சென்று வெங்கடேசனை வெட்டிக்கொல்லும் முயற்சியில், சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் உள்ள சங்கிலியாண்டவர் கோவில் அருகில் வந்தார். அங்கு ரவுடியான ஜேசுதாசுடன், வெங்கடேசன் பேசிக்கொண்டிருந்தார்.

3 பேருடன் விஜய்பாபு சேர்ந்து வருவதை பார்த்த வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். அவரை விஜய்பாபு தனது நண்பர்களுடன் சேர்ந்து விரட்டிச்சென்றார். அவர்களை ரவுடியான ஜேசுதாஸ் தடுத்து நிறுத்தி திட்டினார். இதனால், ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அரிவாளால் ஜேசுதாசை தலை மற்றும் இதர பகுதியில் வெட்டிக் கொல்ல முயன்றனர். ரத்த வெள்ளத்தில் ஜேசுதாஸ் மயங்கி கீழே விழுந்ததும் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து பாலக்கரை போலீசில் ரவுடி ஜேசுதாஸ் கொடுத்த புகாரின்பேரில், நேற்று விஜய்பாபு மற்றும் அவரது நண்பர்களான விமல், அன்பழகன், குமார் ஆகியோர் மீது பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் அஜர்படுத்தினர். பின்னர் 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story