கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட ரெயில் ரெயில்வே வாரியம் ஒப்புதல்


கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட ரெயில் ரெயில்வே வாரியம் ஒப்புதல்
x
தினத்தந்தி 10 March 2019 11:15 PM GMT (Updated: 10 March 2019 7:47 PM GMT)

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட ரெயிலுக்கு, ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை,

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் உள்ளிட்ட புறநகரில் இருந்து சென்னைக்கு வருவதற்கு பொதுமக்களுக்கு மின்சார ரெயில்கள் வரப்பிரசாதமாக உள்ளது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, மூர்மார்க்கெட்-அரக்கோணம், கடற் கரை-அரக்கோணம் மார்க்கங் களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பயணிகள் மூர்மார்க்கெட் அல்லது கடற்கரை ரெயில் நிலையத்துக்கு வந்து பின்னர் அரக்கோணம் செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் கடற் கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் இடையே சுற்றுவட்ட ரெயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதற்கான திட்டத்தை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தயார் செய்து ரெயில்வே வாரிய ஒப்புதலுக்காக அனுப்பி இருந்தது. இந்தநிலையில் நேற்று ரெயில்வே வாரியம் சுற்றுவட்ட ரெயில்கள் இயக்க ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த வகையில் சென்னை கடற்கரை-திருமால்பூர் (வண்டி எண்:40705, 40707, 40907), திருமால்பூர்-கடற்கரை (40712, 40702, 40706) ஆகிய மின்சார ரெயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதேபோல் கடற்கரை -காஞ்சீபுரம் (40803), காஞ்சீபுரம்-கடற்கரை (40804) மின்சார ரெயில்கள் திருமால்பூர் வரை நீட்டிக்கப்படும்.

இந்த திட்டம் தக்கோலம்-அரக்கோணம் இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்டவுடன் அமலுக்கு வரும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story