நீலகிரி மாவட்டத்தில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 7,949 பேர் எழுதுகின்றனர் - வினாத்தாள் கட்டுக்காப்பு அறைக்கு போலீஸ் பாதுகாப்பு


நீலகிரி மாவட்டத்தில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 7,949 பேர் எழுதுகின்றனர் - வினாத்தாள் கட்டுக்காப்பு அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 12 March 2019 10:30 PM GMT (Updated: 12 March 2019 6:36 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 7 ஆயிரத்து 949 பேர் எழுதுகின்றனர். வினாத்தாள் கட்டுக்காப்பு அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஊட்டி,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி மார்ச் 29-ந் தேதி முடிவடைகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 410 மாணவர்கள், 2 ஆயிரத்து 543 மாணவிகள் என மொத்தம் என 4 ஆயிரத்து 953 பேரும், கூடலூர் கல்வி மாவட்டத்தில் ஆயிரத்து 480 மாணவர்கள், ஆயிரத்து 516 மாணவிகள் என 2 ஆயிரத்து 996 பேரும் தேர்வு எழுதுகின்றனர். நீலகிரியில் 3 ஆயிரத்து 890 மாணவர்கள், 4 ஆயிரத்து 59 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 949 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்.

பொதுத்தேர்வுக்காக குன்னூர் கல்வி மாவட்டத்தில் 39 தேர்வு மையங்களும், கூடலூர் கல்வி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களும் என மொத்தம் 57 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, 70-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள், அதிகாரிகளை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை. போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு தொடங்க உள்ளதை தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த வாரம் கொண்டு வரப்பட்டது. ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வினாத்தாள் கட்டுக்காப்பு அறை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. வினாத்தாள்கள் வைக்கப்பட்ட அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

Next Story