சித்ரா பவுர்ணமியன்று நாடாளுமன்ற தேர்தல்: வாக்குப்பதிவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை - கலெக்டர் தகவல்


சித்ரா பவுர்ணமியன்று நாடாளுமன்ற தேர்தல்: வாக்குப்பதிவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 March 2019 11:28 PM GMT (Updated: 12 March 2019 11:28 PM GMT)

சித்ரா பவுர்ணமியன்று நாடாளுமன்ற தேர்தல் வருவதால் வாக்குப்பதிவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகையன்றும், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி இரவு சுமார் 7 மணிக்கு தொடங்கி மறுநாள் 19-ந் தேதி மாலை சுமார் 5 மணியளவில் நிறைவடைகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியதாவது:-

இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. முன்னதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தபோது உரிய ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கூறப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையிலும், திருவண்ணாமலை நகர பகுதியிலும் 250-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவின் போது தடையோ, சிரமமோ, அபாயம் ஏற்படுமா? என்று பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சித்ரா பவுர்ணமி கிரிவலம் இரவு 7 மணிக்கு தான் ஆரம்பிக்கிறது. அதனால் அங்குள்ள பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி வாக்குப்பதிவு செய்து கொள்ளலாம். நகரத்திற்குள் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் அதிகபட்சம் 2 கிலோ மீட்டரில் இருந்து 1½ கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளது. அதனால் சித்ரா பவுர்ணமியின் போது வாக்குப்பதிவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

கிரிவலம் செல்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வருபவர்கள் பயண நேரத்தை கணக்கு செய்து வர வேண்டும்.

2 வாக்கு எண்ணும் மையங்கள் கிரிவலப்பாதையில் உள்ளது. கிரிவலப் பாதையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்கு பொருட்களை கொண்டு செல்ல சிரமங்கள் உள்ளதா, மாற்று வழி உள்ளதா என்று காவல் துறையினருடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறோம். எதுவும் முடியாத பட்சத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் மாற்ற மாநில தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story