தீ விபத்தில் 23 குடிசைகள் எரிந்து சாம்பல்: வீடு கட்டித்தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்


தீ விபத்தில் 23 குடிசைகள் எரிந்து சாம்பல்: வீடு கட்டித்தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 8:59 PM GMT)

திருச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 குடிசைகள் எரிந்து சாம்பலானதில் பாதிக்கப்பட்டவர்கள், வீடு கட்டித்தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி,

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடையில் குதுப்பாப்பள்ளம் பகுதியில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு குடிசையில் பிடித்த தீ மள, மளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 23 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. தீ விபத்து நடந்த இடத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்தநிலையில் நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை சிக்னல் அருகே திரண்டு வந்தனர். அவர்கள் வில்லியம்ஸ்சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அந்த பகுதி மக்கள் கூறுகையில், “குழந்தைகளின் நோட்டு, புத்தகங்கள், துணிகள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டது. கொளுத்தும் வெயிலில் வீடு இல்லாமல் தவித்து வருகிறோம். இதுவரை அந்த பகுதியில் மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை. எங்களுக்கு உடனடியாக வீடு கட்டி தர வேண்டும். மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறினர். இதையடுத்து தாசில்தார் ராஜவேலு, போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story