ஈரோட்டில் பரிதாபம் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


ஈரோட்டில் பரிதாபம் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 11:11 PM GMT)

ஈரோட்டில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

ஈரோடு,

ஈரோடு பெரியசேமூர் நந்தவனம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44). தறிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகனான கவுதம் (11) சின்னசேமூரில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை கவுதம் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினான். அதன்பிறகு அவன் தனது நண்பனான சிவனேஸ்வரனுடன் அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றான்.

2 பேருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றின் ஓரத்தில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது கவுதம் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கினான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவனேஸ்வரன் அங்கிருந்து ஓடி சென்று பொதுமக்களிடம் தகவல் கொடுத்தான். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கவுதமின் பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு கிணற்றை நோக்கி ஓடினார்கள். மேலும், இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், வீரப்பன்சத்திரம் போலீசாரும் அங்கு விரைந்தனர். கிணற்றில் இறங்கிய தீயணைப்பு படையினர் கவுதமை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்கு 25 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால் அவனை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், மீனவர்களுடன் சேர்ந்து தீயணைப்பு படையினர் இரவு 8 மணிஅளவில் கவுதமை பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கவுதமின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story