மின்னணு எந்திரங்களை மாற்றுப்பாதையில் எடுத்து வர ஆய்வு - வாக்குப்பதிவு மையங்களை பார்வையிட்டபின் ஐ.ஜி.பேட்டி


மின்னணு எந்திரங்களை மாற்றுப்பாதையில் எடுத்து வர ஆய்வு - வாக்குப்பதிவு மையங்களை பார்வையிட்டபின் ஐ.ஜி.பேட்டி
x
தினத்தந்தி 13 March 2019 11:29 PM GMT (Updated: 13 March 2019 11:29 PM GMT)

திருவண்ணாமலை, ஆரணி தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றுப்பாதையில் எடுத்துச்செல்ல ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி.கூறினார்.

திருவண்ணாமலை,

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது. திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எண்ணப்படுகின்றன.

இங்கு பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வதற்காக வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் நேற்று திருவண்ணாமலை வந்தார். 2 மையங்களையும் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், போலீசார் உடனிருந்தனர்.

பின்னர் ஐ.ஜி.நாகராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதியன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.

சித்ரா பவுர்ணமி கிரிவலம் அன்று இரவு 7 மணிக்கு மேல் தொடங்கி மறுநாள் 19-ந் தேதியன்று மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வாக்காளிக்கலாம். திருவண்ணாமலை நகரத்தில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மைங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றுப் பாதையில் எடுத்து வருவதற்கு முதல் கட்ட ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக 5 காவல் முனைகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்வதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையங்கள், கிரிவலப் பாதை, திருவண்ணாமலை நகரம் ஆகியவை சி.சி.டி.வி. காமிரா மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படும்.

கிரிவலம் வரும் உள்ளூர், வெளியூர், பிற மாநில பக்தர்கள் தங்கள் ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை செய்து விட்டு கிரிவலம் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வாக்குப்பதிவு செய்வதற்கும் மற்றும் கிரிவலம் வருவதற்கும் பக்தர்கள் தங்கள் பயணத்தை சரியான முன்னேற்பாடு செய்தால் கண்டிப்பாக எந்தவித சிரமும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story