அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 10,484 மாணவர்கள் எழுதினர்


அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 10,484 மாணவர்கள் எழுதினர்
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 7:01 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வை 10,484 மாணவர்கள் எழுதினர்.

அரியலூர்,

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம் ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த 173 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் மாணவ- மாணவிகளுக்கு நேற்று மதியம் 49 தேர்வு மையங்களில் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதையொட்டி மாணவ- மாணவிகள் மதியம் 1 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டு தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் தேர்வு தொடங்குவதற்கு முன்பு மாணவ- மாணவிகள் ஆங்காங்கே அமர்ந்து படித்ததை கடைசியாக ஒரு முறை அவசர, அவசரமாக புத்தகத்தை புரட்டி பார்த்தனர். இதையடுத்து மதியம் 1.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பிரார்த்தனையை தொடர்ந்து தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனர். தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாணவ- மாணவிகள் தேர்வறைக்கு செல்வதற்கு முன் ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர். அப்போது ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு கைக்கொடுத்தும், ஆசிர்வாதம் வழங்கியும் தேர்வறைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் 1.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். சரியாக மதியம் 2 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர். 2.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர்.

அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை எழுத 5,381 மாணவர்களும், 5,554 மாணவிகளும் என மொத்தம் 10,935 பேர் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் நேற்று தமிழ் முதல் தாள் தேர்வினை 5,152 மாணவர்களும், 5,332 மாணவிகள் என மொத்தம் 10,484 பேர் எழுதினர். 451 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தன.

அரியலூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக தலைமை ஆசிரியர்களும் மற்றும் 52 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அரியலூர், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு தேர்வு மையத்திற்கு 10 வழித்தடங்களில் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 10 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்-வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 90 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி வந்து கண்காணித்தனர்.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாள் தேர்வினை எழுதிய மாணவ- மாணவிகளை கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விடைத்தாள்-வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி ஏதும் ஏற்பட்டிருக்கிறதா? தேர்வறையில் செல்போன் ஏதும் பயன்பாட்டில் இருக்கிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தியும் உடனிருந்தார்.

மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 4.45 மணிக்கு முடிவடைந்தது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத தனியாக ஆசிரிய- ஆசிரியைகள் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதி கொடுத்தனர். அவர்களுக்கு கூடுதலாக 50 நிமிடம் ஒதுக்கப்பட்டது. நேற்று நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாள் தேர்வில் யாரும் காப்பி அடிக்கவில்லை. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாணவ- மாணவிகள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத ஏதுவாக போதிய பஸ் வசதியும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் உட்பட போதிய போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், தாமரைக்குளம், வி.கைகாட்டி, ஜெயங்கொண்டம், கீழப்பழுவூர், வரதராஜன்பேட்டை, விக்கிரமங்கலம், மீன்சுருட்டி, செந்துறை, உடையார்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று நடைபெற்றது. வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் தமிழ் 2-ம் தாள் தேர்வு நடைபெற இருக்கிறது. இதே போல் ஆங்கிலம் முதல் தாள், 2-ம் தாள் தேர்வுகளும் மதியம் தான் நடைபெறுகிறது. வருகிற 29-ந் தேதியுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவடைகிறது. 

Next Story