செஞ்சி அருகே, வடமாநில வாலிபர் மர்ம சாவு வழக்கில் 2 பேர் கைது - சக தொழிலாளர்களே அடித்துக்கொன்றது அம்பலம்


செஞ்சி அருகே, வடமாநில வாலிபர் மர்ம சாவு வழக்கில் 2 பேர் கைது - சக தொழிலாளர்களே அடித்துக்கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 7:41 PM GMT)

செஞ்சி அருகே வடமாநில வாலிபர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் வேலைக்கு வராததால் சக தொழிலாளர்களே அடித்துக்கொன்றது அம்பலமாகி உள்ளது.

செஞ்சி,

செஞ்சி அருகே ஊரணிதாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், செஞ்சி இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் ஜார்க்கண்ட் மாநிலம் கல்காப்பூரை அடுத்த குவல்கட்டா கிராமத்தை சேர்ந்த பஜால் மகன் ஜெய்ராம்(வயது 30) என்பதும், செஞ்சியில் தங்கி, போர்வெல் லாரி உரிமையாளர் ஒருவர் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

செஞ்சி சக்கராபுரத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க சக தொழிலாளர்கள் லாரியில் புறப்பட தயாரானார்கள். அப்போது ஜெய்ராம் தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்றும், சொந்த ஊருக்கு செல்லப் போவதாகவும் தன்னுடன் வேலை பார்க்கும் ஜார்க்கண்ட் மாநிலம் சப்தரிகா என்ற ஊரை சேர்ந்த அருண்குமார் மகன் ராஜேஷ்குமார்(22), கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் நாகசந்திரா கிராமத்தை சேர்ந்த மஞ்சு மகன் குமார்(35) ஆகியோரிடம் கூறியதோடு, வேலைக்கு செல்ல மறுத்துள்ளார். இதனால் அவர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார், குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஜெய்ராமை அடித்துக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ்குமார், குமார் ஆகியோரை போலீசார் கைது செய்த னர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story