எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது: குமரியில் 112 மையங்களில் 23,986 பேர் எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது: குமரியில் 112 மையங்களில் 23,986 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 8:28 PM GMT)

எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. குமரியில் 112 மையங்களில் 23,986 பேர் தேர்வு எழுதினர்.

நாகர்கோவில்,

பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

முதல் நாளில் மாணவர்கள் தமிழ் முதல் தாள் தேர்வு எழுதினர். குமரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 945 மாணவர்களும், 12 ஆயிரத்து 41 மாணவிகளுமாக மொத்தம் 23 ஆயிரத்து 986 பேர் இந்த தேர்வை எழுதினர். இதற்காக குமரி மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களிலும் மொத்தம் 112 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நாகர்கோவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு பெண்கள் பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினார்கள்.

நேற்று காலையில் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கும், மதியத்துக்கு பிறகு எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தேர்வுகளை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதேபோல் தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள் ஆகிய தேர்வுகளும் மதியத்துக்கு பிறகே நடைபெற இருக்கின்றன. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட தேர்வுகள் காலையில் நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story