அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே பா.ஜனதாவுடன் கூட்டணி சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் சொல்கிறார்


அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே பா.ஜனதாவுடன் கூட்டணி சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் சொல்கிறார்
x
தினத்தந்தி 14 March 2019 9:30 PM GMT (Updated: 14 March 2019 8:59 PM GMT)

அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கப்பட்டதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2014-ம் ஆண்டு மராட்டிய சட்டமன்ற தேர்தலின்போது நாங்கள் கூட்டணியை முறித்துக்கொள்ளவில்லை. பா.ஜனதா தான் அதை செய்தது. 4 ஆண்டுகள் கழித்து பா.ஜனதா கட்சியின் தலைவர், உத்தவ் தாக்கரேயிடம் வந்து உங்களின் துணை இன்றி வெற்றி பெற முடியாது என கூறினார். எனவே உத்தவ் தாக்கரே அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தார்.

பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகளில் பா.ஜனதாவுடன் எங்களுக்கு கருத்துவேறுபாடு உள்ளது. இதுகுறித்து நாங்கள் வெளிப்படையாகவே விமர்சித்து உள்ளோம். அவர்களுடன் கூட்டணி அமைத்ததின் மூலம் அவர்களுக்கு அடிபணிந்து விட்டதாக அர்த்தம் இல்லை.

எங்களுக்கு நிலைப்பாடு உள்ளது. அதை நாங்கள் வெளிப்படுத்துவோம். எதுவாக இருந்தபோதும் எங்களுக்குள் கூட்டணி அமைந்துவிட்டது. இது அரசியல் நிர்ப்பந்தம் ஆகும்.

கடந்த 4½ ஆண்டுகளாக அவர்கள் தனித்து போட்டியிடுவதாக கூறினர். காங்கிரஸ் மெகா கூட்டணி முயற்சியையும் விமர்சித்தனர். ஆனால் ஒரே கட்சி நாட்டை ஆளும் நாட்கள் ஓடிவிட்டது. அது மாநிலமோ அல்லது நாடாக இருந்தாலும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே வெற்றிபெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story