தாராபுரத்தில், பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு - மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்


தாராபுரத்தில், பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு - மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்
x
தினத்தந்தி 14 March 2019 10:03 PM GMT (Updated: 14 March 2019 10:03 PM GMT)

தாராபுரத்தில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம், கரூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜாமணி (வயது 65). இவர் வருவாய்த்துறையில் சர்வேயராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். தற்போது இவர் திருப்பூர் நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிக சர்வேயராக வேலை செய்து வருகிறார்.

கோவையில் நிலம் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டதால், ராஜாமணி தனது வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக நேற்று ஸ்கூட்டரில் தாராபுரம் வந்தார். பின்னர் பெரிய கடைவீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கிக்கு சென்று, தலா ரூ.2 லட்சம் வீதம், ரூ.8 லட்சத்திற்கு 4 வரைவோலை எடுத்தார். பிறகு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை எடுத்து, அதில் ரூ.1,000 மட்டும் எடுத்து சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

அதன் பின்னர் கையில் இருந்த ரூ.8 லட்சத்திற்கான வரைவோலைகளையும், ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்தையும் ஒரு மஞ்சள் பையில் வைத்து ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார். அதன் பிறகு ஸ்கூட்டரில் ஏறி, தாராபுரம்-உடுமலை ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு சாலையோரமாக தனது ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, அங்கிருந்த டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து ராஜாமணி திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டரின் பெட்டி திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் மற்றும் ரூ.8 லட்சத்திற்கான வரைவோலை இருந்த மஞ்சள் பையை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் இவர் வங்கியில் இருந்து பணம் எடுத்து வருவதை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து கைவரிசை காட்டி உள்ளது தெரியவந்தது.

இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்மணி மற்றும் குற்றவியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிறகு சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று ராஜாமணியின் ரூ.8 லட்சத்திற்கான வரைவோலையை யாரும் வங்கியில் கொடுத்து மாற்றி பணம் எடுக்காத வகையில் நிறுத்தி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருட்டு நடைபெற்ற இடத்திற்கு அருகே இருந்த கடைகளின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில், ராஜாமணியின் ஸ்கூட்டரில் வைத்திருந்த பணத்தை, மர்ம ஆசாமிகள் திருடும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஸ்கூட்டர் பெட்டியில் வைத்திருந்த 1 லட்சத்து 94 ஆயிரம் பணத்தை, பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story