கூடுவாஞ்சேரி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது


கூடுவாஞ்சேரி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 March 2019 10:00 PM GMT (Updated: 15 March 2019 7:06 PM GMT)

கூடுவாஞ்சேரி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தைலாவரம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனன் யாதவ் (வயது 19), கூடுவாஞ்சேரியை சேர்ந்த லட்சுமிபதி (25), உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹர்ஸ் (19) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் கையில் வைத்திருந்த 1 கிலோ 900 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே புதுவாயலில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து வந்த மினி டெம்போவை வழிமறித்து அவர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் அந்த டெம்போவில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பாக்கு பொருட்கள் 43 பண்டல்கள் இருப்பது தெரியவந்தது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து பெரியபாளையத்தை அடுத்த ஆரணிக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த குட்கா பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். பிடிபட்ட மினி டெம்போவுடன் கூடிய தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த டிரைவர் கேசவன்(45) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story