பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது


பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 15 March 2019 10:45 PM GMT (Updated: 15 March 2019 8:00 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி உள்பட பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டணை வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் பஸ் நிலையம் அருகில் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் கோமதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார்.

இதில் சங்கங்களின் நிர்வாகிகள் பகவன்ராஜ், சண்முகம், சந்திரசேகரன், தமிழ்ச்செல்வி, ராமசாமி, சந்திரா, ஏசுதாஸ், ராகுலன் உள்பட பலர் கலந்து கொண்டு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story