தடைசெய்யப்பட்ட கடல் மண்புழுக்கள் பிடித்த 3 பேர் கைது


தடைசெய்யப்பட்ட கடல் மண்புழுக்கள் பிடித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 March 2019 11:05 PM GMT (Updated: 15 March 2019 11:05 PM GMT)

மணமேல்குடி கடற்கரையில், தடை செய்யப்பட்ட கடல்மண்புழுக்கள் பிடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மணமேல்குடி,

மணமேல்குடி கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் மண்புழுக்களை பிடிக்கப்படுவதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் வனத்துறை வன அலுவலர் ராஜசேகரன், வேட்டை தடுப்பு காவலர் முத்துராமன் உள்ளிட்டவர்கள் மணமேல்குடி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் கடல் மண் புழுக்களை 3 பேர் பிடித்து கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முருகன், மணி மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த முருகன் என தெரியவந்தது. அவர்களை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து 5 கிலோ கடல் மண்புழுக்களை பறிமுதல் செய்தனர்.

இந்த கடல் மண்புழு இறால் பண்ணைக்கு மருந்து தயாரிக்க பயன்படுகிறது. இது ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது என அதிகாரிகள் கூறினார்கள். மேலும் தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story