நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது ஆயத்த பணிகள் தீவிரம்


நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது ஆயத்த பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 16 March 2019 11:00 PM GMT (Updated: 16 March 2019 8:38 PM GMT)

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதையொட்டி ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்த வேட்புமனுக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெறப்படும். மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வேட்புமனுக்களை பெற உள்ளார்.

இதையொட்டி வேட்புமனுக்களை பெறுவதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

எனவே இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கோடுகள் வரையும் பணி நேற்று நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் மற்றும் அவருடன் 4 நபர்கள் என மொத்தம் 5 நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறையி்ல் அனுமதிக்கப்படுவர். வேட்புமனுவை சம்மந்தப்பட்ட வேட்பாளரோ அல்லது அந்த வேட்பாளரை முன்மொழிபவரோ தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரடியாக அளிக்கவேண்டும். வேட்புமனுவை முன்மொழிபவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வருகிற 26-ந் தேதி கடைசிநாள் எனவும், 27-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் எனவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story