நில புரோக்கர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த ஆசிரியையை மீட்டு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்


நில புரோக்கர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த ஆசிரியையை மீட்டு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 16 March 2019 9:58 PM GMT (Updated: 16 March 2019 9:58 PM GMT)

பெங்களூருவில், நில புரோக்கர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த ஆசிரியையை மீட்டு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டரை உயர் அதிகாரிகள் பாராட்டி ரூ.70 ஆயிரம் வெகுமதி வழங்கினர்.

பெங்களூரு,

பெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜில் வசித்து வருபவர் தனுஜா (வயது 40). இவருடைய கணவர் இறந்துவிட்டார். தனுஜா ஒசகேரெஹள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் அவர் தனது வீட்டில் டியூசனும் நடத்தி வருகிறார்.

தனுஜாவிடம் ஒசகெரேஹள்ளியில் வசித்து வரும் சேகர் (46) என்பவரின் 2 குழந்தைகள் படித்து வருகிறார்கள். சேகர் வீடு மற்றும் நில புரோக்கராக இருக்கிறார்.

இந்த நிலையில், தனுஜா பள்ளி முடிந்த பின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சேகர் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடினார். இதில் படுகாயமடைந்த தனுஜா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதற்கிடையே, கிரிநகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சித்தலிங்கய்யா அங்கு காரில் சென்றார். அப்போது தனுஜா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை பார்த்து அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், தனுஜாவை மீட்டு போலீஸ் வாகனத்திலேயே அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

முன்னதாக, தனுஜாவின் உடலில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தது. இதனால் அவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டது. இதுபற்றி டாக்டர்கள் இன்ஸ்பெக்டர் சித்தலிங்கய்யாவிடம் கூறினர்.

அப்போது தனுஜா, சித்தலிங்கய்யா ஆகியோருக்கு ஒரே வகையான ரத்தம் இருந்தது தெரியவந்தது. இதனால் சித்தலிங்கய்யா, தனுஜாவுக்கு ரத்தத்தை தானமாக கொடுத்தார்.

மனிதநேயத்துடன் செயல்பட்டு தனுஜாவின் உயிரை காப்பாற்றிய சித்தலிங்கய்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு பாராட்டு சான்றிதழையும், ரூ.20 ஆயிரம் வெகுமதியையும் இன்ஸ்பெக்டர் சித்தலிங்கய்யாவுக்கு வழங்கினார்.

மேலும், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார், தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை மற்றும் போலீசார் இணைந்து நேற்று பூங்கொத்து கொடுத்து இன்ஸ்பெக்டர் சித்தலிங்கய்யாவை வாழ்த்தியதோடு, அவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

Next Story