இளம்பெண்ணின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் 2 பேர் கைது


இளம்பெண்ணின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2019 10:15 PM GMT (Updated: 17 March 2019 3:00 PM GMT)

குலசேகரம் அருகே மார்பிங் செய்யப்பட்ட இளம்பெண்ணின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குலசேகரம்,

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 25). இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும், பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதையடுத்து, இளம்பெண் சஜினுடன் பேசுவதை புறக்கணித்து வந்தார். இதனால், சஜினுக்கு இளம்பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இளம்பெண்ணின் புகைப்படங்களை கம்ப்யூட்டர் மூலம் ஆபாசமாக மார்பிங் செய்தார். தொடர்ந்து ஆபாச படங்களை இளம்பெண்ணின் செல்போனுக்கு அனுப்பி வைத்தார்.

இதனை பார்த்ததும் அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். அத்துடன், தனக்கு ரூ.1 லட்சம் தர வேண்டும், இல்லையெனில் இந்த படங்களை இணையதளத்தில் வெளியிட போவதாக சஜின் மிரட்டினார். இதற்கு சஜினின் நண்பர் விக்னேஷ் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதனால், பயந்துபோன இளம்பெண் தனது தாயாரிடம் கூறி அழுதார். மேலும் இதுபற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், சஜின், விக்னேஷ் ஆகியோர் தனது படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டினர் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தேவபிரியா வழக்குப்பதிவு செய்து சஜின், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தார்.

ஏற்கனவே, பொள்ளாச்சியில் இளம்பெண்களை செல்போனில் ஆபாச படம் எடுத்து பாலியல் கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், குலசேகரத்தில் இளம்பெண்ணின் படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story