தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி - தேங்காய் பறிக்க ஏறியபோது பரிதாபம்


தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி - தேங்காய் பறிக்க ஏறியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 17 March 2019 10:45 PM GMT (Updated: 17 March 2019 11:58 PM GMT)

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழந்தார். தேங்காய் பறிக்க மரத்தில் ஏறியபோது இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கக்கன்நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் உதயகுமார் (வயது 19). இவர் புதுச்சேரியில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் உதயகுமார் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். மாங்குப்பம் சாலையில் சென்றபோது, அங்குள்ள ஒரு தென்னை மரத்தில் உதயகுமார் தேங்காய் பறிக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது உதயகுமார் எதிர்பாராத விதமாக தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த உதயகுமாரின் உடலை பார்த்து அவரது நண்பர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story