கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் விழா: தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி


கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் விழா: தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 March 2019 10:30 PM GMT (Updated: 18 March 2019 7:55 PM GMT)

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் பரணேற்று விழாவில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பரணேற்று திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் போன்றவை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணேற்று விழா நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. இதற்காக அம்மன் மற்றும் தாரகாசூரனுக்கு எதிர்- எதிர் திசையில் உயரமாக இரண்டு பரண்கள் (மேடை) அமைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனை பரண் மேல் ஏற்றினர். தாரகாசூரன் வேடமணிந்து ஒருவர் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த பரணில் நின்று அம்மனை போருக்கு வரும்படி அழைத்தான். இந்த நிகழ்வு நேற்று அதிகாலை வரை தொடர்ந்தது.

நேற்று காலை 7 மணிக்கு போர் தொடங்கியது. இறுதியில் அம்மன் தாரகாசூரனின் தலையை வெட்டி வதம் செய்தார். இந்த நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் 11.30 மணி வரை நடந்தது. மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு குருதி கொடுக்கப்பட்டு திருவிழா முடிந்தது.

விழாவில் குமரி, கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Next Story