குமரி மாவட்டத்தில் கொடி கம்பங்களை மீண்டும் அறுத்து அகற்றினால் போராட்டம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேட்டி


குமரி மாவட்டத்தில் கொடி கம்பங்களை மீண்டும் அறுத்து அகற்றினால் போராட்டம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 18 March 2019 10:15 PM GMT (Updated: 18 March 2019 8:10 PM GMT)

குமரி மாவட்டத்தில் கொடி கம்பங்களை மீண்டும் அறுத்து அகற்றினால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை தேர்தல் தொடர்பாகவும், வேட்பு மனு தாக்கல் தொடர்பாகவும் அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., வக்கீல்கள் லீனஸ்ராஜ், மகேஷ், அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் ஜெய கோபாலன், பா.ஜனதா கட்சியின் நகர தலைவர் நாகராஜன் உள்பட பல கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் பிற பகுதிகளிலும், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தேர்தல் அதிகாரிகள் என்ற போர்வையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மிகவும் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் ஆணையம் கொடிக்கம்பங்களில் கொடியை அகற்றக்கூறியுள்ளது. கொடிக்கம்பங்களில் கட்சிக்கொடி வர்ணம் இருந்தால் அவற்றை மறைக்க கூறியுள்ளது.

ஆனால் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கொடி கம்பங்களை அறுத்து எடுத்து அகற்றி வருகிறார்கள். அதுமட்டுமின்றி தற்போது கொடி கம்பம் நாட்டப்பட்டிருந்த பீடப்பகுதிகளையும் அகற்றுகிறார்கள். இது மிகப்பெரிய தவறான செயலாகும். மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் காங்கிரஸ் கட்சியால் நாட்டப்பட்டுள்ள பல கொடிக்கம்பங்கள் பெருந்தலைவர் காமராஜராலும், தி.மு.க. கொடிக்கம்பங்கள் பேரறிஞர் அண்ணா, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றவர்களாலும், இந்து முன்னணி கொடிக்கம்பங்கள் தாணுலிங்க நாடார் போன்ற வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களின் கரங்களால் ஏற்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள் ஆகும்.

தேர்தல் அதிகாரிகள் என்ற போர்வையில் இந்த கொடிக்கம்பங்களை அறுத்து எடுத்து அகற்றும் மாநகராட்சி ஆணையருக்கு எங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதை இன்று (அதாவது நேற்று) நடந்த மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமையிலான அனைத்துக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நானும், அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் வலியுறுத்தினோம். அதற்கு அவர் இனிமேல் இதுபோன்று நடக்காது என்று கூறியுள்ளார்.

எனவே நாளைய (இன்று) தினத்தில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் அறுத்து எடுக்கப்பட்ட தி.மு.க. கொடிக்கம்பங்கள் அனைத்தையும் அந்தந்த இடத்தில் எனது தலைமையில் நாட்டப்பட இருக்கிறது. இதேபோல மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவரவர்களது கட்சிக் கொடிக்கம்பங்களை நாட்ட இருக்கிறார்கள். மீண்டும் இந்த கொடிக்கம்பங்களை அதிகாரிகள் அறுத்து எடுத்தால் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.

நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பு அருகே கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அறுத்து அகற்றினர்.

இந்தநிலையில் நேற்று அந்த கொடிக்கம்பங்கள் நாட்டப்பட்டு இருந்த பீட பகுதிகளையும் பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.

Next Story