நாகை தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதை வீடியோ மூலம் பதிவு செய்ய நடவடிக்கை


நாகை தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதை வீடியோ மூலம் பதிவு செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 8:44 PM GMT)

நாகை தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதை வீடியோ மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்்த்தைகள் தீவிரமடைந்தன. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நாகை நாடாளுமன்ற தொகுதியில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளையும், நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியது. நாகை நாடாளுமன்ற தொகுதியின் தேர்்தல் நடத்தும் அலுவலராக திருவாரூர்் மாவட்ட கலெக்டர் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்். திருவாரூரில் நாகை நாடாளுமன்ற தொகுதி, திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இதே போல் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திலும், திருவாரூர் தாசில்தார் அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெறப்படும். இதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் பெறப்படுவதால் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 100 மீ. தூரத்துக்கு வெள்ளை வண்ணத்தில் கோடு போட்டு அடையாளமிடப்பட்டுள்ளது.

எல்லை கோடு போடப்பட்ட இடத்தில் போலீசார் தடுப்பு அமைத்து வேட்பாளரோடு 4 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் அனுமதிக்கப்படுவர். வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்வதை வீடியோ மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story