பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு: மாணவ, மாணவிகள் ‘செல்பி’ எடுத்து கொண்டாட்டம்


பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு: மாணவ, மாணவிகள் ‘செல்பி’ எடுத்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 8:03 PM GMT)

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று நிறைவுபெற்றது. இதனால் மாணவ, மாணவிகள் ‘செல்பி’ எடுத்து கொண்டாடினர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கு முதல் தாள், இரண்டாம் தாள் என இல்லாமல் ஒரே தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களை சேர்த்து 21 ஆயிரத்து 96 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 283 பேர் தனித்தேர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நிறைவுபெற்றது. இறுதியாக உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட தேர்வுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவுபெற்றதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நேற்று கடைசி நாள் என்பதால் மாணவர்கள் சிலர் தங்களது புத்தக பைகளை தூக்கி போட்டு பிடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாணவ, மாணவிகள் சிலர் வண்ண பொடியை ஒருவருக்கொருவர் தூவி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். மேலும் மாணவ-மாணவிகள் கை குலுக்கியும், கட்டி பிடித்தும், ‘செல்பி’ எடுத்தும் கொண்டாடி பிரியா விடை பெற்றனர். மேலும் மாணவ, மாணவிகள் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர்.

மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை கிடைத்து உள்ளது. இந்த நீண்ட விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்து, அடுத்து வரும் கல்லூரி படிப்பை புத்துணர்வுடன் எதிர்நோக்கி இருப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். 

Next Story