தார்வாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டிடம் இடிந்தது; 2 பேர் பலி - 40 பேரின் கதி என்ன?


தார்வாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டிடம் இடிந்தது; 2 பேர் பலி - 40 பேரின் கதி என்ன?
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 8:53 PM GMT)

தார்வார் டவுனில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட தனியார் வணிக வளாக கட்டிடம் நேற்று இடிந்து தரைமட்டமானது. இதில் 2 பேர் பலியானார்கள். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 40 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி இரவிலும் நீடித்தது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக தனியார் வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த வணிக வளாக கட்டிடம்5மாடிகளை கொண்டது ஆகும். அந்த கட்டிடத்தின் பணிகள் வேகமாக நடந்து வந்தன. இதில் தரை தளம் மற்றும் முதல் மாடி கட்டிட பணிகள் முடிந்து அங்கு பல கடைகள் இயங்கி வந்தன.

இந்த நிலையில் நேற்று அந்த வணிக வளாகத்தின் கட்டிட பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.அதோடு அந்த வளாகத்தில் உள்ள கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இதனால் அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சி அளித்தது.

கட்டிடம் இடிந்து விழுந்ததில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வணிகவளாக கடைகளில் இருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக இதுபற்றி தார்வார் டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாகி இருந்ததால் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினரால் உடனடியாக மீட்புபணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அதன்மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றி அங்கு சிக்கியிருந்த தொழிலாளர்களை தீயணைப்பு துறையினரும், மீட்பு குழுவினரும் மீட்டனர்.

முதலில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக தார்வார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள். அவர்களுடைய உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. அவர்கள் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் என்று கூறப்படுகிறது.

அவர்களுடைய உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அந்த வணிக வளாகத்தின் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினரின் கதி என்ன ஆனதோ? என்று பதற்றத்தில் கதறி அழுதனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மருத்துவக்குழுக்களும், 10 ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன.

காயங்களுடன் மீட்கப்படுபவர்களுக்கு மருத்துவ குழுக்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக மாவட்ட ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகள் மூலம் அனுப்பி வைத்தனர்.

மீட்பு பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள், கியாஸ் கட்டர்கள், பொக்லைன் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த சம்பவம் தார்வார் மாவட்டத்தில் நேற்று பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

இடிபாடுகளுக்குள் 40 பேருக்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் நேற்று இரவிலும் நீடித்தது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி கூறுகையில்,‘‘கட்டிட விபத்து பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அங்கு மீட்பு பணியில் ஈடுபட அனுபவம் வாய்ந்த மீட்பு குழுக்களை சிறப்பு விமான மூலம் அனுப்பி வைக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்று கூறினார்.


Next Story